குடிநீர் கேட்டு மேட்டூரில் பொதுமக்கள் சாலைமறியல் ஆத்தூரில் பஸ் சிறைபிடிப்பு

மேட்டூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆத்தூரில் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-12 22:00 GMT
மேட்டூர், 

சேலம் மாவட்டம் மேட்டூர் தங்கமாபுரிபட்டணம் பெரியார் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை அந்த பகுதி பொதுமக்கள் சேலம்-தங்கமாபுரிபட்டணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கருமலைக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி, சாக்கடை வசதி, கழிப்பிட வசதி போன்ற வசதிகள் செய்து தரக்கோரி நேற்று காலை கல்லாநத்தம் பஸ்நிறுத்தம் அருகே திரண்டனர். அப்போது ஆத்தூரிலிருந்து முட்டல்செல்லும் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீசார் மற்றும் கல்லாநத்தம் ஊராட்சி மன்ற செயலாளர் ரவி ஆகியோர் அங்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது இன்று (திங்கட்கிழமை) ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளர் முன்னிலையில் குறைகள் குறித்து எடுத்துக்கூறி உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து பஸ்சை விடுவித்தனர். அரசு பஸ்சை சுமார் 45 நிமிடம் கிராம மக்கள் சிறைபிடித்ததால் கல்யாணம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அருகே உடையாப்பட்டி கக்கன்காலனியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இது பற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தநிலையில், கக்கன்காலனியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலை குடிநீர் கேட்டு உடையாப்பட்டி-சென்னை சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் அங்கு வந்தனர். இதையடுத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும், சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மற்றும் போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்