கும்பகோணத்தில் சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.4½ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

கும்பகோணத்தில் சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.4½ லட்சம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-05-12 22:45 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சரக்கு வேனில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.

கும்பகோணம் ராமசாமி கோவில் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது.


அந்த வேனை கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்த முயன்றனர். ஆனால் சரக்கு வேன் டிரைவரும், அவருடன் வந்தவரும் சரக்கு வேனை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து போலீசார் வேனை சோதனை செய்தனர்.

அப்போது அந்த வேனில் 3 ஆயிரத்து 482 மதுபாட்டில்கள் இருந்தன. அவை புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.


இதையடுத்து போலீசார் மதுபாட்டில்களையும், சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் என போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்