பழவேற்காடு கலங்கரை விளக்கத்தை பார்வையிட அனுமதி ரத்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் உள்ள கலங்கரை விளக்கத்தை பாதுகாப்பு நடவடிக்கைக்காக பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Update: 2019-05-13 22:45 GMT
பொன்னேரி,

பொன்னேரி அருகே பழவேற்காட்டில் திருத்தப்பட்ட உலகார்ந்த களம் நிலையை விளக்க கருவியுடன் 155 மீட்டர் உயரத்திற்கு புதிய கலங்கரை விளக்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.

ஏற்கனவே பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கம் மீது ஏறி பழவேற்காட்டில் இயற்கை அமைப்பினை ரசித்து வந்தனர். பழவேற்காடு பகுதியில் ஜெலிடியாகோட்டை, டச்சுக்கல்லறை, மசூதிகள், ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பொருட்கள், படகுத்துறை, நிழல் கெடிகாரம், பறவைகள் சரணாலயம், இயற்கை எழில் கொண்ட நீண்ட அழகிய கடற்கரை உள்பட பல்வேறு வகையான சிறப்பு வாய்ந்த இடங்களை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட பலர் தினந்தோறும் வந்து ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மாலை 3 மணி முதல் 5 மணி வரை கலங்கரை விளக்கத்தை பார்வையிட மத்திய அரசு அனுமதி அளித்தது.

இலங்கையில் உள்ள தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்பு எதிரொலியாக மத்திய அரசு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களை கண்காணிக்க மாநில அரசுக்கு தகவல்களை அனுப்பி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் கலங்கரை விளக்கங்கள் மற்றும் விளக்குகள் துறை இயக்குனர் உத்தரவின்பேரில், மறு உத்தரவு வரும் வரை கலங்கரை விளக்கத்தை பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்