கோவில் அர்ச்சகர் வீட்டின் கதவை உடைத்து 34½ பவுன் நகைகள் கொள்ளை

மதுரையில் கோவில் அர்ச்சகர் வீட்டின் கதவை உடைத்து 34½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-05-13 22:40 GMT

மதுரை,

மதுரை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் முரளிகண்ணன் (வயது 39). இவர் அந்த பகுதியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 34½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

உடனே அவர் இது குறித்து அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் கைரேகை நிபுணர்களுடன் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டில் பதிவான கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்