ரபேல் ஒப்பந்த ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக விசாரணை நடக்கிறது ராணுவ அமைச்சகம் தகவல்

ரபேல் ஒப்பந்த ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக உள்மட்ட விசாரணை நடந்து வருவதாக ராணுவ அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2019-05-14 22:23 GMT
மும்பை,

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது. அந்த நிறுவனத்தின் இந்திய பங்குதார நிறுவனமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையின் போது, ஒப்பந்த ஆவணங்களை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட்டு, ரபேல் விவகாரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளியாகின. கசிந்த ஆவணங்களின் அடிப்படையில் ரபேல் ஒப்பந்தம் குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டு மறு விசாரணையை தொடங்கி உள்ளது.

உள்மட்ட விசாரணை..

இந்த நிலையில் மும்பையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அனில் கல்கலி, ரபேல் ஒப்பந்த ஆணவங்கள் திருடப்பட்டது மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல் வழங்கும்படி ராணுவ அமைச்சகத்திடம் கேட்டு இருந்தார்.

அதற்கு பதில் அளித்த ராணுவ அமைச்சகம், ரபேல் ஒப்பந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் முழு விவரங்களையும் வழங்க முடியாது. ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக ராணுவ அமைச்சகத்தில் உள்மட்ட விசாரணையை நடத்த உத்தரவிட்டு இருப்பதாக கூறியுள்ளது.

மேலும் செய்திகள்