புதுவை ஓட்டலில் குளியலறையில் பெண் டாக்டரை படம் பிடித்த வாலிபர் கைது

புதுவை ஓட்டலில் குளியலறையில் பெண் டாக்டரை படம் பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-14 23:00 GMT
புதுச்சேரி,

புதுவை புஸ்சி வீதியில் சுற்றுலா பயணிகள் தங்கும் தனியார் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் ஐதராபாத்தை சேர்ந்த பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் தனது நண்பருடன் அறை எடுத்து தங்கியுள்ளார்.

அவர்கள் நேற்று முன்தினம் புதுவையை சுற்றிப்பார்த்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பியுள்ளனர். நள்ளிரவில் பெண் டாக்டர் குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது யாரோ ஒருவர் தன்னை கண்காணிப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே குளியலறையின் வெண்டிலேட்டரை பார்த்தபோது அதன் வழியாக மர்ம நபர் ஒருவர் செல்போனை வைத்து படம் எடுப்பதை அவர் கண்டு விட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் கூச்சலிட்டபடி வெளியே வந்தார். அதற்குள் படம் எடுத்த மர்ம நபர் ஓட்டம் பிடித்தார். அவரை பார்ப்பதற்கு ஓட்டலில் பணிபுரியும் ஊழியர் போல் இருந்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் டாக்டர் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் ஓட்டல் ஊழியரான பிரசாந்த் (வயது 24) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் செல்போன் மூலம் படம் எடுத்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்