வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி - போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர்கள் புகார்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர்கள் புகார் தெரிவித்தனர்.

Update: 2019-05-14 23:30 GMT
சேலம்,

தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து மனு ஒன்று கொடுத்தனர். இதுகுறித்து அந்த வாலிபர்கள் கூறியதாவது:-

சேலம் 5 ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் ஒன்று முகநூல் உள்பட சமூக வலைதளங்களில் கனடா, செர்பியா, கம்போடியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிக நபர்கள் வேலைக்கு தேவை என்று விளம்பரம் செய்தது. இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு பேசினோம்.

அப்போது அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் எங்களிடம் ஆசை வார்த்தை கூறி ஒவ்வொரு நபரிடம் இருந்தும் தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பெற்றனர். ஆனால் அவர்கள் எங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பாமல் ஏமாற்றி வந்தனர். இதையடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த நாங்கள் சேலத்துக்கு உடனடியாக வந்து பார்த்த போது அலுவலகமும், அவருடைய வீடும் பூட்டி கிடந்தன. இதுபற்றி அருகில் உள்ளவர்களிடம் விசாரித்த போது இரவோடு, இரவாக அவர்கள் அலுவலகத்தை காலி செய்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் இதுபோன்று வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி செய்து உள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்