‘ரூ.25 லட்சம் கேட்டு என்னை கடத்தினார்கள்’ - வீடு திரும்பிய தி.மு.க. பிரமுகர் போலீசில் தகவல்

‘ரூ.25 லட்சம் கேட்டு என்னை கடத்தினார்கள்’ என்று வீடு திரும்பிய தி.மு.க. பிரமுகர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-15 00:01 GMT
சூரமங்கலம்,

சேலம் ஆண்டிப்பட்டி பனங்காடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 46). இவர், பனங்காடு கிளை தி.மு.க. செயலாளராக உள்ளார். மேலும், தனது வீட்டிலேயே நிதி நிறுவனம் மற்றும் ஏலச்சீட்டுகளும் நடத்தி வருகிறார். இவர் கடந்த 12-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் நேரு என்பவருடன் சிவதாபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் இவர்களுடைய மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் நாகராஜன், நேரு ஆகியோரை சரமாரியாக தாக்கியது. இதில் நேரு அந்த கும்பலில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து நாகராஜனை மட்டும் அந்த கும்பல் காரில் கடத்தி சென்றது. இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த கும்பலை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில், அவரை இறக்கிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. பின்னர் அவர் அங்கிருந்து பஸ் மூலம் நேற்று அதிகாலை சேலம் வந்தார். இதையடுத்து அவர் வீடு திரும்பினார்.

அதைத்தொடர்ந்து சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு வந்த அவரிடம் போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவரிடம், உங்களை கடத்தி சென்றவர்கள் யார்?, எதற்காக கடத்தினார்கள்? என்பன உள்ளிட்ட விவரங்களை போலீசார் கேட்டறிந்தனர்.

போலீசாரின் விசாரணையில் நாகராஜன் கூறியதாவது:-

நான் ஏராளமானவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளேன். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி மர்ம கும்பல் ஒன்று என்னை காரில் கடத்தி சென்றது. காரில் வைத்து அந்த கும்பல் சரமாரியாக தாக்கி ரூ.25 லட்சம் கேட்டனர்.

மேலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் எனது மனைவி நிர்மலாவிற்கு போன் செய்து, உனது கணவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளனர். போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்த மர்ம கும்பல் என்னை விடுவிக்க முடிவு செய்தது.

ஆந்திர மாநிலம் சித்தூரில் என்னை இறக்கிவிட்ட அந்த கும்பல், மீண்டும் வருவோம், பணத்தை எடுத்து வைக்குமாறும், எங்களை பற்றி போலீசாரிடம் தெரிவிக்கக்கூடாது என்றும் கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தி.மு.க. பிரமுகர் நாகராஜனை கடத்தி சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்