திருவாரூரில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு

திருவாரூரில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2019-05-15 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு விதிமுறைகளை பின்பற்றி பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் ஆனந்த் உத்தரவிட்டார். அதன்படி நேற்று திருவாரூரில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் உதவி கலெக்டர் முருகதாஸ், வட்டார போக்குவரத்து அதிகாரி செந்தில்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்ஜோசப் ஆகியோர் பள்ளி வாகனங்களில் தேவையான பாதுகாப்பு வசதி உள்ளதா? மாணவர்களை ஏற்றி செல்லும் நிலையில் வாகனம் உள்ளதா? என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி செந்தில்குமார் கூறியதாவது:-

திருவாரூர், நன்னிலம், குடவாசல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 92 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது வாகனங்களில் அவசர கால வெளியேறும் வசதி, குழந்தைகள் எளிதாக வாகனத்தில் ஏற தாழ்வான படிக்கட்டுகள், பள்ளி வாகனம் என்ற அறிவிப்பு, வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி போன்ற வசதிகள் உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் விதிமுறைகளை முறையாக கடைப் பிடிக்காத 4 பள்ளி வாகனங் களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டு உள்ளது. பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும்போது டிரைவர்கள் முழு கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும்.

செல்போன் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அரசு விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப் படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது போக்குவரத்து துணை ஆணையர் உதயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பண்ணன் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள், பள்ளி வாகனங்களின் டிரைவர்கள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்