அரிவாள், கத்தியுடன் சுற்றித்திரிந்த வழிப்பறி கொள்ளையர் 3 பேர் கைது

அரிவாள் மற்றும் கத்தியுடன் சுற்றித்திரிந்த வழிப்பறி கொள்ளையர் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-15 22:15 GMT
அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை, கமுதி, ரெட்டியபட்டி போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் போலீசார் சந்தோஷ், குமரகுரு, ஜெயகோபி கொண்ட தனிப்படை அமைக்கபட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் அருப்புக்கோட்டை 4 வழிச்சாலை பகுதியில் சந்தேகப்படும் படியாக 3 பேர் சுற்றித் திரிவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் தனிப்படை போலீசார் கோவிலாங்குளம் விலக்கு பகுதிக்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த 3 பேரை தடுத்து நிறுத்தினர். அவர்கள் போலீசாரை தள்ளி விட்டு தப்பிக்க முயன்றனர். ஆனாலும் அவர்களை சாதுர்யமாக வளைத்து பிடித்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் மூவரும் பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது.

மேலும் இவர்கள் அம்மன்பட்டியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்ற அஜீத் (வயது 21), கமுதி முத்துபட்டியை சேர்ந்த முத்தமிழ்செல்வன் (23), வேப்பங்குளம் பத்மாஸ்வரன் (21) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்த நகையை பறிமுதல் செய்தனர். இவர்கள் வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியையும் போலீசார் கைப்பற்றினர். இவர்கள் இரு சக்கரவாகனத்தை திருடி நம்பர் விவரம் ஏதுமின்றி ஓட்டி வந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தார்கள். இதைதொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அரிவாள் மற்றும் கத்தியுடன் சுற்றித்திரிந்த கொள்ளையரை மடக்கிய தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

மேலும் செய்திகள்