மேலூர் அருகே நள்ளிரவில் பயங்கரம்: வீட்டில் தூங்கிய வாலிபர் கழுத்தை அறுத்து கொலை

மேலூர் அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். அவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-05-15 22:35 GMT

மேலூர்,

மேலூர் அருகே உள்ள மேலவளவு வி.எஸ்.நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 37). இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கோடை விடுமுறையையொட்டி சங்கீதா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் ராஜா மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு ராஜா, அப்பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவருடன் சேர்ந்து மதுகுடித்துள்ளார். பின்னர் அவர் மட்டும் வீட்டில் தனியாக படுத்து தூங்கியுள்ளார். மேலும் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்துவைத்தபடி தூங்கி கொண்டிருந்தார்.

இந்தநிலையில் நள்ளிரவு மர்ம ஆசாமிகள் சிலர் ராஜாவின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். பின்னர் அந்த நபர்கள் ராஜாவை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர்.

மறுநாள் காலை ராஜா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மேலவளவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவரது வீட்டில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது ஒரு கத்தி கைப்பற்றப்பட்டது. மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜா, அவரது தாயாரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை கொள்ளை அடிப்பதற்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் தூங்கி கொண்டிருந்த வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்