கடையநல்லூர் அருகே பரிதாபம் பஸ் மோதி காவலாளி பலி

கடையநல்லூர் அருகே பஸ் மோதி காவலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-05-16 22:30 GMT
கடையநல்லூர், 

கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் மலைவாழ் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் ராமச்சந்திரன் (வயது 35). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் மலைப்பகுதியில் தேன் எடுத்து, விற்பனை செய்தும் வந்தார்.

இவர் நேற்று மாலையில் தன்னுடைய உறவினரான ராமன் என்பவருடன் கடையநல்லூர் அருகே குமந்தபுரத்தில் இருந்து கடையநல்லூருக்கு சாலையோரம் நடந்து சென்றார். அப்போது மதுரையில் இருந்து குற்றாலத்துக்கு சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக ராமச்சந்திரன் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட ராமச்சந்திரன் மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவரான விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மடத்துபட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தியை (53) கைது செய்தனர்.

விபத்தில் பலியான ராமச்சந்திரனுக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்