விருத்தாசலம் அருகே, 15 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

விருத்தாசலம் அருகே 15 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

Update: 2019-05-16 22:30 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், விருத்தாசலம் அருகே ஊ.மங்களம் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். இவர்களின் திருமணம் நேற்று காலை 6.30 மணிக்கு ஊ.மங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் சமூக விரிவாக்க நல அலுவலர் ஜெயபிரபா, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பார்த்திபராஜா, ஊர்நல அலுவலர் விஜயா மற்றும் போலீசார், சிறுமியின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு திருமண வயதான 18 வயது பூர்த்தியாக வில்லை என்பது தெரிந்தது.

இதையடுத்து அதிகாரிகள், சிறுமியின் குடும்பத்தினரிடம் திருமண வயது பூர்த்தியடையாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் ஆகும். எனவே இதை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அந்த சிறுமியை மீட்டு கடலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்