தமிழக கவர்னர் ஊட்டி வருகை, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஊட்டிக்கு வந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2019-05-16 22:30 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை மெக்ஐவர் என்ற ஆங்கிலேயர் கடந்த 1857-ம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர் விதைகள், மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும் மலர் கண்காட்சி சர்வதேச அளவில் புகழ்பெற்றது.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மலர் கண்காட்சியை காலை 10 மணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து மலர் மாடங்கள் மற்றும் அலங்காரங்களை பார்வையிடுகிறார். தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக நேற்று மாலை ஊட்டி வந்தார்.

தாவரவியல் பூங்கா மேல்பகுதியில் உள்ள ராஜ்பவனில் அவர் தங்கி உள்ளார். ஊட்டிக்கு வருகை தந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்