காஞ்சீபுரம் குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல்

மதுராந்தகம் நகராட்சியில் சரிவர குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-16 22:30 GMT
மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. அந்த பகுதி பொதுமக்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் 2 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.

இதனை கண்டித்து 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை உள்ளிட்ட போலீசார் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் சரிவர வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் நகராட்சி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்