வண்ணாரப்பேட்டையில் 2-வது மாடியில் இருந்து விழுந்து பெண் சாவு கொலையா? போலீஸ் விசாரணை

வண்ணாரப்பேட்டையில் 2-வது மாடியில் இருந்து விழுந்து பெண் பலியானார். அவர், மாடியில் இருந்து தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-05-16 22:00 GMT
பிராட்வே,

சென்னை வண்ணாரப்பேட்டை காத்பாடாவை சேர்ந்தவர் முகமது என்ற சின்னத்தம்பி(வயது 50). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி கைனிஷா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கைனிஷா அதிராமபட்டினத்தில் தனது மகன்களுடன் வசித்து வருகிறார். மனைவி மற்றும் மகன்களை சின்னதம்பி 6 மாதத்துக்கு ஒருமுறை சென்று பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதற்கிடையில் பழைய வண்ணாரப்பேட்டை டி.எச்.ரோட்டை சேர்ந்த கட்டிடத்தொழிலாளியான மீனா(49) என்பவருடன் சின்னத்தம்பிக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக கணவன்-மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் மீனாவும், சின்னத்தம்பியும் 2-வது மாடியில் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மீனா, மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த வண்ணாரப்பேட்டை போலீசார், பலியான மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பிரசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனா, குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது சின்னத்தம்பியிடம் ஏற்பட்ட தகராறில் அவர் மீனாவை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்தாரா? என்ற கோணத்தில் சின்னத்தம்பியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்