பவானி அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

பவானி அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-05-17 22:15 GMT

பவானி,

பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையம் காந்திநகர் 2–வது வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி....இவர்களுக்கு தனசேகரன் என்ற மகனும், வாசுகி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

வாசுகி அவருடைய கணவர் வீட்டிலும், தனசேகரன் தன்னுடைய தந்தை வீட்டிலும் மனைவியுடன் வசித்து வந்தனர்.

கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு, ராஜேந்திரனின் மனைவி இறந்துவிட்டார். அதனால் மனவேதனை அடைந்த ராஜேந்திரன் மதுகுடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துவந்தார்.

இதனால் தனசேகரன் தந்தையிடம், ‘ஏன் இப்படி வேலைக்கு செல்லாமல் மதுக்குடிக்கிறீர்கள்‘ என்று கேட்டுள்ளார். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் மனைவியின் இறப்பால் துக்கம் தாங்காமல் இருந்த ராஜேந்திரன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவர் வலியால் அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று காலை ராஜேந்திரன் இறந்தார்.

இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்