2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: சித்தப்பாவுக்கு வழங்கிய ஜாமீனை ஐகோர்ட்டு ரத்து செய்தது, உடனடியாக கீழ்கோர்ட்டில் சரண் அடையவும் உத்தரவு

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சித்தப்பாவுக்கு வழங்கிய ஜாமீனை மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்தது. மேலும் உடனடியாக கீழ்கோர்ட்டில் சரண் அடையவும் உத்தரவிட்டது.

Update: 2019-05-17 22:45 GMT
மதுரை,

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் மருத்துவ பிரதிநிதியாக உள்ளார். இவர் 17 மற்றும் 14 வயதுடைய 2 சிறுமிகளுக்கு சித்தப்பா உறவு முறை ஆவார். இந்த நிலையில் அவர் அந்த சிறுமிகளை அரை நிர்வாண புகைப்படம் எடுத்து, அவர்களின் செல்போனில் வாட்ஸ்-அப்பில் அனுப்பி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இப்புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவருக்கு தூத்துக்குடி மகளிர் கோர்ட்டு கடந்த 2.3.2019-ல் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தந்தை மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த வழக்கில் சிறுமிகளுக்கு கொடூரம் இழைக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமிகளின் குடும்பத்தின் ஏழ்மையை பயன்படுத்தி, சிறுமிகளுக்கு பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து அரை நிர்வாணமாக படம் பிடித்து பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். அவருக்கு வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. அவர் உடனடியாக கீழ்கோர்ட்டில் சரண் அடைய வேண்டும். இல்லாவிட்டால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்