ரெயில்கள் எதிர் எதிரே வந்த சம்பவம்: திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு குற்றச்சாட்டு நோட்டீஸ்

திருமங்கலம் அருகே ரெயில்கள் எதிர் எதிரே வந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு குற்றச்சாட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2019-05-17 23:00 GMT
மதுரை,

திருமங்கலம் அருகே ரெயில்கள் எதிர் எதிரே வந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார், கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் சிவசிங்மீனா, இயக்க கட்டுப்பாட்டாளர் முருகானந்தம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். மேலும், போக்குவரத்து ஆய்வாளர் ராஜசேகரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் பல்வேறு தரப்பினரிடமும் தென்னக ரெயில்வே தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணை முடிவில், கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் சிவசிங்மீனா மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. அவர் விதிமுறைகளை முறையாக பின்பற்றியதாக கூறி அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் இயக்க கட்டுப்பாட்டாளர் ஆகியோருக்கு எஸ்.எப்.5 என்ற குற்றச்சாட்டு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு நிருபணம் ஆகும் பட்சத்தில், அதிகபட்ச தண்டனையாக பணி நீக்கம் வரை செய்வதற்கு வாய்ப்புள்ளது.

அதேபோல திருமங்கலத்தில் என்ஜினீயரிங் பிரிவை சேர்ந்த கேட் கீப்பர் ஒருவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் சிக்னல் இல்லாமல் ரெயில்களை இயக்குவதற்கு வழங்கப்படும் அவசர கால எண் குறித்த ஓப்புகை சீட்டில் திருத்தம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுவும் இந்த சம்பவம் நடக்க முக்கியம் காரணம் என தெரிகிறது.

மேலும் செய்திகள்