வேளாங்கண்ணி அருகே பரிதாபம், கார் மோதி, பொக்லின் எந்திர டிரைவர்கள் 2 பேர் பலி

வேளாங்கண்ணி அருகே கார் மோதி, பொக்லின் எந்திர டிரைவர்கள் 2 பேர் பலியானார்கள். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-05-17 22:45 GMT
வேளாங்கண்ணி,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அங்கமுத்து தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் விஜயகுமார்(வயது 33). நாமக்கல் மாவட்டம் மோகனூர் சின்னத்தம்பி பாளையம் தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் பூபதி (32). இவர்கள் இருவரும் பொக்லின் எந்திர டிரைவர்கள்.

நேற்று முன்தினம் இரவு இருவரும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திருப்பூண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை விஜயகுமார் ஓட்டினார். கிழக்கு கடற்கரை சாலையில் காரைநகர் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். விபத்து குறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான விஜயகுமார், பூபதி ஆகியோரின் உடல்களை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி சென்ற திருக்குவளை தாலுகா மேல வாழக்கரை முனியன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயபால் மகன் பாண்டியராஜ் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான பூபதியின் பேண்ட் பாக்கெட்டில் ரூ.50 ஆயிரமும், செல்போனும் இருந்தது. அதேபோல விஜயகுமார் பேண்ட் பாக்கெட்டில் ரூ.10 ஆயிரத்து 500 இருந்தது.

அந்த பணம் மற்றும் செல்போனை கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி எடுத்து இறந்தவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்