அரியலூர் மாவட்ட தனியார் பள்ளி பஸ்களை அதிகாரிகள் ஆய்வு

அரியலூர் மாவட்ட தனியார் பள்ளி பஸ்களை அதிகாரிகள் ஆய்வு 14 பஸ்களின் உரிமங்கள் ரத்து.

Update: 2019-05-18 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் பஸ்கள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றதா? என்பது குறித்து நடத்தப்படுகின்ற வருடாந்திர ஆய்வு அரியலூர் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த ஆய்வில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாரயணன் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவ்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர். இதில் பள்ளி பஸ்களின் படிக்கட்டு எவ்வளவு உயரம் இருக்கவேண்டும். தீயணைப்பு கருவிகள் சரியாக வேலை செய்கிறதா?, விபத்து போன்ற ஆபத்து காலத்தில் வெளியே செல்ல அவசர வழிக்கான கதவுகள் சரியாக இருக்கின்றதா?, முதலுதவி பெட்டி இருக்கின்றதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்று 212 பள்ளி பஸ்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தகுதி சான்று சமர்ப்பிக்கப்படாத, சிறு பழுதுகள் இருந்த 14 பஸ்கள் அடையாளம் காணப்பட்டதில் அவற்றின் உரிமங்களை அதிகாரிகள் அதிரடியாக ரத்து செய்தனர். மேலும் பள்ளி பஸ்களை வேகமாக ஓட்டினால், மது அருந்தி விட்டு இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் டிரைவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆய்வின்போது அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சரவணபவன் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்