குலமாணிக்கம் இஞ்ஞாசியார் ஆலய திருவிழா திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்

குலமாணிக்கம் இஞ்ஞாசியார் ஆலய திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2019-05-19 22:30 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குலமாணிக்கம் கிராமத்தில் உள்ள இஞ்ஞாசியார் ஆலயத்தின் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 10-ந் தேதி பங்குத்தந்தை செல்வராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. அதிலிருந்து ஒரு வாரம் திருவிழாவிற்கான நவநாள் திருப்பலி தினந்தோறும் நடைபெற்றது. திருவிழாவில் ஆலய பங்குத்தந்தையால் திருவிழாவிற்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து இரவு 12 மணி அளவில் சிறப்பு அலங்கார வேண்டுதல் சப்பரம் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்தது. பின்னர் நேற்று முன்தினம் திருவிழாவிற்கான சிறப்பு திருப்பலி மறைவட்ட முதன்மை குரு ஹென்றி புஷ்பராஜால் நடத்தப்பட்டது.

சப்பரங்கள்

தொடர்ந்து இரவு 12 மணி அளவில் வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டு மேள, தாளங்களுடன் கன்னி மாதா, இஞ்ஞாசியார், வனத்து சின்னப்பர், உயிர்த்த ஏசு, மிக்கேல் சமனஸ் ஆகியோரின் சொரூபங்கள் ஐந்து சப்பரங்களில் வைக்கப்பட்டது. பின்னர் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக சப்பரங்கள் ஊர்வலமாக சென்று மீண்டும் ஆலையத்தை வந்தடைந்தது. இதில் ஆங்காங்கே உள்ள பொதுமக்கள் சப்பரங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மாலை அணிவித்தும் வழிபாடு செய்தனர். இந்த திருவிழாவை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வந்திருந்தனர். திருவிழாவில் வெங்கனூர் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

மேலும் செய்திகள்