சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் திருச்சி வாலிபர் கைது

நாகூர் அருகே சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக திருச்சி வாலிபரை கைது செய்தனர்.

Update: 2019-05-20 23:00 GMT
நாகூர்,

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படியும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரிலும் மாவட்டத்தில் மது கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், ராஜேந்திரன் தலைமையில் போலீசார் நேற்று காலை வாஞ்சூர் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில், 35 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்களும், 400 பீர் பாட்டில்களும் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சரக்கு வேனை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர், திருச்சி மாவட்டம் உறையூர் ஜக்கம்மாள் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அருண்குமார்(வயது 32) என்பது தெரிய வந்தது. இவர், காரைக்கால் பகுதியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி திருச்சிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்