நாங்குநேரி அருகே காங்கிரஸ் பிரமுகரை அரிவாளால் வெட்டிய அக்காள் மகன் கைது - மேலும் 7 பேருக்கு வலைவீச்சு

நாங்குநேரி அருகே காங்கிரஸ் பிரமுகரை அரிவாளால் வெட்டிய வழக்கில் நேற்று அவருடைய அக்காள் மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் 7 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2019-05-20 23:00 GMT
நாங்குநேரி,

நாங்குநேரி அருகில் உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு(வயது40). இவர் நாங்குநேரி நகர காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வீடு முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.

பலத்த காயமடைந்த அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அவருக்கும், நத்தத்தில் உள்ள அக்காள் கணவர் நயினார்தேவர் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதத்தில் அக்காள் கணவர் குடும்பத்தினர், கூலிப்படையினர் மூலம் அவரை அரிவாளால் வெட்டியதும், இந்த சம்பவத்தில் 8 பேர் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நேற்று சுடலைக்கண்ணுவின் அக்காள் மகனான நத்தத்தை சேர்ந்த நயினார்தேவர் மகன் சரவணன்(26) என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்