மராட்டியத்தில் 1-ந்தேதி முதல் மீன்பிடி தடை காலம் தொடங்குகிறது
மராட்டியத்தில் வருகிற 1-ந்தேதி முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்கிறது. இந்த தடை 2 மாதம் அமலில் இருக்கும்.
மும்பை,
மராட்டியம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஆண்டு தோறும் 2 மாதம் மீன் பிடி தடைகாலம் அறிவிக்கப்படுகிறது. இந்த காலத்தில் மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க கூடாது.
மராட்டியத்தில் மோசமான வானிலையில் மீனவர்கள் சிக்கி பாதிக்கப்படுவதை தடுக்க மழைக்காலத்தின் போது மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அடுத்த மாதம்(ஜூன்) 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை 2 மாதத்துக்கு மீன் பிடி தடைகாலம் என மாநில மீன் வளத்துறை அறிவித்து உள்ளது. இந்த காலகட்டத்தில் மீனவர்கள் விசைப்படகில் சென்று மீன் பிடிக்கமாட்டார்கள். மீறி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல தடையை மீறி மீன்பிடிக்க செல்லும் போது விபத்து ஏற்பட்டு படகு சேதமடைந்தால் அதற்கு இழப்பீடு வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.