திருவட்டார் அருகே துணிகரம் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை– பணம் பறிப்பு

கணவருடன் சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளை வழிமறித்து மர்மநபர்கள் நகை– பணத்தை பறித்துச் சென்றனர்.

Update: 2019-05-22 22:15 GMT
திருவட்டார்,

திருவட்டார் அருகே செறுகோல் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 65). இவருடைய மனைவி ஜெபஷீபா புளோரா (60). இவர்கள் கல்லங்குழியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். விழா முடிந்த பின்பு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

செறுகோல் அருகே வந்த போது திடீரென ஒரு மோட்டார் சைக்கிள் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தபடி வந்து நின்றது. அதில் இருந்த 3 வாலிபர்களில் ஒருவர், ஜெயஷீபா புளோரா வைத்திருந்த பையை பிடுங்கினார்.

நகை, பணம் பறிப்பு

அந்த பையில் 1 பவுன் நெக்லஸ், ரூ.10 ஆயிரம் பணம், 3 ஏ.டி.எம். கார்டு போன்றவை இருந்தன. இதை பார்த்த கணவன்–மனைவி இருவரும் சத்தம் போட்டனர். உடனே, அந்த வாலிபர்கள் பணம், நகையுடன் கண் இமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளில் வந்த கணவன்– மனைவியை வழிமறித்து நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்