பள்ளிகள் திறக்கும் முன்பு வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை

பள்ளிகள் திறக்கும் முன்பு வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் பெற்றோர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2019-05-22 23:00 GMT
காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்க தலைவர் வின்சென்ட், செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர், கலெக்டர் விக்ராந்த்ராஜாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பள்ளி, கல்லூரி வாகனங்களை கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முன் வட்டார போக்குவரத்துறை சார்பில் ஆய்வு செய்வது வழக்கம். தற்போது ஆய்வு நடைபெறும் முன் பள்ளிகள் தொடங்கும் நிலை உள்ளது. பள்ளிகள் தொடங்கிய பின் இந்த ஆய்வு நடத்தினால், அது மாணவர்களுக்கு இடையூறாக அமையும். எனவே, பள்ளி தொடங்கும் முன்பு ஆய்வை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

பெண் காவலர்கள்

குறிப்பாக பள்ளி வாகனங்களின் காப்பீடு, ஓட்டுநர் உரிமம், முதலுதவிப்பெட்டி, தீயணைப்பு சாதனம், வாகனம் இயங்கும் நிலை, வாகன இருக்கை, பிரேக் உள்ளிட்ட வசதிகளை முழுமையாக ஆய்வு செய்யவேண்டும். பராமரிப்பு இல்லாத வாகன உரிமையாளர்கள் மற்றும் பள்ளிகளுடன் எந்த சமரசமும் செய்யக்கூடாது. பள்ளி வாகனம், ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றக்கூடாது. வாகனங்களில் எக்காரணம் கொண்டும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தகூடாது. மாணவிகள் மட்டுமே படிக்கும்

பள்ளி, கல்லூரிகளில் காலை, மாலை நேரங்களில் பள்ளி வாசலில் பெண் காவலர்களை பணியமர்த்தி, மாணவிகள் பாதுகாப்புடன் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்