திசையன்விளை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவர் விஷம் குடித்து தற்கொலை

திசையன்விளை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-05-22 22:23 GMT
திசையன்விளை,

திசையன்விளை அருகே உள்ள முதுமொத்தான்மொழி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்புநாடார்.(வயது 55). தொழிலாளி. இவருக்கு 3 மகளும், 2 மகனும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர்.

மகன்கள் சென்னையில் தொழில் செய்து வருகின்றனர். சுயம்புநாடார் முதுமொத்தான்மொழியில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி இவரது மனைவி கிருஷ்ணவேணி உடல்நலக்குறைவால் சென்னையில் இறந்தார். இதற்காக சுயம்பு சென்னைக்கு சென்றார்.

மனைவியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். மனைவியை நினைத்து அக்கம் பக்கத்தினரிடம் அவர் புலம்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர், கடந்த 17-ந்தேதி திசையன்விளையில் இருந்து முதுமொத்தான்மொழி செல்லும் சாலையில் உள்ள ஓடையில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றுமுன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்