நெல்லையில் 3,528 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

நெல்லையில் 3,528 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வியாபாரிகளுக்கு ரூ.5½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2019-05-24 22:45 GMT
நெல்லை, 

நெல்லை மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி உத்தரவுப்படி 8 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் நேற்றும் நெல்லை மாநகரில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள், ஓட்டல்கள், பூக்கடைகள், இறைச்சி கடைகளில் ஆய்வு நடத்தினர்.

அப்போது சிறு, குறு நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை 3,528 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றை பயன்படுத்திய வியாபாரிகளுக்கு ரூ.5 லட்சத்து 54 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டது.

நெல்லை மாநகரில் கடைகள் மற்றும் பொது இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவது தெரியவந்தால் அபராதத்துடன் கூடிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்