ஆலங்குடியில் 100 நாள் வேலை கேட்டு சாலை மறியல்

அனைவருக்கும் வேலையை பகிர்ந்து வழங்கவேண்டும் என்று கூறி பள்ளத்திவிடுதி கிராமத்தில் ஆலங்குடி-கொத்தமங்கலம் சாலையில் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-25 22:45 GMT
ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள பள்ளத்தி விடுதியில் நடப்பாண்டில் மழை இல்லததாலும், நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாததாலும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு தடுக்கப்பட்டதாலும், 100 நாள் ஊரக வேலை உறுதி திட்டத்தில் பலருக்கு ஒரு நாள் வேலை கூட வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் சில குறிப்பிட்ட பணியாளர்களுக்கே மீண்டும் மீண்டும் வேலை வழங்குவதாகவும், அனைவருக்கும் வேலையை பகிர்ந்து வழங்கவேண்டும் என்று கூறி பள்ளத்திவிடுதி கிராமத்தில் ஆலங்குடி-கொத்தமங்கலம் சாலையில் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார், ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, அனைவருக்கும் வேலை பகிர்ந்து அளிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்