படப்பை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் 6 வழி சாலைக்கான பணிகள் படப்பை பகுதியில் நடைபெற்று வருகின்றன.

Update: 2019-05-25 22:30 GMT
படப்பை,

இந்நிலையில் இந்த சாலை வழியாக வேலூர், காஞ்சீபுரம், ஒரகடம், தாம்பரம், கோயம்பேடு, சென்னை, அடையார், வண்டலூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு மாநகர அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்லும் முக்கிய இடமாக படப்பை பஸ் நிறுத்தம் அமைந்து உள்ளது.

இந்த பகுதியிலிருந்து தினந்தோறும் சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், படப்பை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் நிழற்குடை இல்லாததால் கொளுத்தும் கடும் வெயிலில் சாலை ஓரத்தில் நின்று அவதிப்படுகின்றனர்.

எனவே படப்பை பஸ் நிறுத்தத்தில் உடனடியாக தற்காலிக பஸ் நிழற்குடையோ அல்லது துணி பந்தலாவது அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் செய்திகள்