நீடாமங்கலத்தில் இருந்து காஞ்சீபுரத்துக்கு அரவைக்காக 945 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

நீடாமங்கலத்தில் இருந்து காஞ்சீபுரத்துக்கு அரவைக்காக 945 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2019-05-25 22:45 GMT
நீடாமங்கலம்,

விவசாயிகளிடம் இருந்து நேரடி அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும். பின்னர் நெல் மூட்டைகள் அரவைக்காக மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் வெளிமாவட்டங்களுக்கும் சரக்கு ரெயில் மூலம் அரவைக்காக அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி நீடாமங்கலத்தில் இருந்து காஞ்சீபுரத்திற்கு 945 டன் நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி அசேஷம், ஆதனூர், தலையாமங்கலம், இடையர்நத்தம், தெற்குநத்தம், மூவாநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்கள், சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை ஆகியவற்றில் இருந்து 72 லாரிகளில் நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 20 பெட்டிகளில் ஏற்றினர். இதைத் தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் காஞ்சீபுரத்துக்கு புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்