ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 100 பேரிடம் மோசடி : பெண் உள்பட 3 பேர் கைது

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 100 பேரிடம் மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-05-25 23:30 GMT

மும்பை,

நவிமும்பையை சேர்ந்தவர் துக்காராம். இவருக்கு சகோதரி மூலம் அந்தேரியை சேர்ந்த சீமா (வயது30) என்ற பெண் அறிமுகம் ஆனார். சீமா தனக்கு ரெயில்வேயில் உயர் அதிகாரிகளை தெரியும் எனவும், அவர்கள் மூலம் துக்காராமுக்கு வேலை வாங்கி தருவதாகவும் துக்காராமிடம் கூறினார்.

இதனை நம்பிய அவர் சீமாவிடம் ரூ.7 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல துக்காராமின் நண்பர்களும் ரெயில்வே வேலைக்காக அவரிடம் பணத்தை கொடுத்து உள்ளனர். இந்தநிலையில் சீமா வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்தார்.

இதுகுறித்து துக்காராம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மும்பை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் சீமா, பீகாரை சேர்ந்த ராஜேஷ்குமார் (28), உத்தரபிரதேசத்தை சேர்ந்த உதய்பன் ராய் ஆகியோருடன் சேர்ந்து ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 100 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்