மோட்டார் சைக்கிள்–ஆட்டோ மோதல்; பெண் பலி

சோழவந்தான் அருகே ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்துபோனார்.

Update: 2019-05-25 22:41 GMT

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே உள்ள ரிசபம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி வெள்ளச்சி (வயது 48). இவர் மதுரையில் வாழைக்காய், வாழை இலை வியாபாரம் செய்து வந்தார். வெள்ளச்சி நேற்று காலை வழக்கம்போல் வியாபாரத்திற்காக ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

மதுரை–திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் திருவாலவாயநல்லூர் பிரிவு பகுதியில் அந்த ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அதனை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் அந்த மோட்டார் சைக்கிள் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோவில் சென்ற வெள்ளச்சி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இதேபோல் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரும் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சோழவந்தான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் வெள்ளச்சி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கும், படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கும் அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்