மீஞ்சூர் அருகே சத்துணவு பெண் ஊழியர் கழுத்தை அறுத்து கொலை வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்

மீஞ்சூர் அருகே சத்துணவு பெண் ஊழியர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு, வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2019-05-26 23:00 GMT
மீஞ்சூர்,

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகாமி (வயது 35). இவர் காட்டூர் ஆரம்பப் பள்ளியில் சத்துணவு மையத்தில் சமையல் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திவ்யாபரதன் (7) என்ற மகன் உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாமிக்கும் அவரது கனவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து மீஞ்சூரில் உள்ள வாயலூர் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மேலும் நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சிவகாமி பிணமாக கிடந்தார். இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, சிவகாமியின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு இருந்தார். அவரது கை மற்றும் உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன் அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் உடல் கிடந்தது.

போலீசார் விசாரணையில், அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என என்பது தெரியவந்தது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சத்துணவு பெண் ஊழியரை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் காட்டூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்