அரவக்குறிச்சி அருகே மதுபோதையில், செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது

அரவக்குறிச்சி அருகே மதுபோதையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-05-26 22:15 GMT
அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா செல்லி வலசு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் அப்பகுதியில் உள்ள ஒரு செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்தார். அப்போது அவர் தனது சொத்துக்களை சிலர் அபகரிக்க முயல்வதால், மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என கூறி மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் கூடினர். பின்னர் செல்வராஜிடம் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் கீழே இறங்கி வரவில்லை.

கைது

உடனடியாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மைக் மூலம் எச்சரிக்கை விடுத்தவாறு செல்வராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர் கீழே இறங்கி வந்தார். பின்னர் செல்வராஜுக்கு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து செல்போன் டவர் காவலாளி அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அனுமதியின்றி செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததாக செல்வராஜை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்