சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2019-05-27 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளியை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 60). கைத்தறி நெசவுத் தொழிலாளியான இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 7 வயது சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது குறித்து அச்சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் கூறினாள். சிறுமியின் பெற்றோர், குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுந்தரத்தை கைது செய்து, கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

10 ஆண்டு சிறை

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சுந்தரத்திற்கு போக்சோ சட்டத்தின் கீழ் (குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் சட்டம்) 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சுந்தரத்தை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்