இயற்கை பேரிடர் பாதிப்புகளை அறிந்துகொள்ள புதிய செயலி கலெக்டர் அண்ணாதுரை தகவல்

இயற்கை பேரிடர் பாதிப்புகள் குறித்து புதிய செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.

Update: 2019-05-29 23:00 GMT
தஞ்சாவூர்,

இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் புதிதாக ‘‘tnsmart’’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தங்களின் ஸ்மார்ட் செல்போனில் உள்ள கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இந்த செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் மழை, வெள்ளம், அதிக வெப்பம் போன்ற பேரிடர் காலங்களில் விழிப்புணர்வு அறிக்கைகள் அனுப்பப்பட்டு எச்சரிக்கை செய்யப்படும்.


பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து இயற்கை பேரிடரின்போது பயன்பெறலாம்.

மேலும், இயற்கை பேரிடரால் சேதமடைந்த வீடு, கால்நடை, பயிர் ஆகியவற்றை படம் பிடித்து பதிவேற்றம் செய்யும் வசதி இந்த செயலியில் உள்ளது.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்