கவுந்தப்பாடி அருகே சூறாவளிக்காற்றுடன் மழை மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் சாவு

கவுந்தப்பாடி அருகே சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-05-29 22:30 GMT
கவுந்தப்பாடி,

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல இடங்களில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அதேபோல் கவுந்தப்பாடி பகுதியிலும் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் ஒரு சில இடங்களில் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்து கிடந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இந்த நிலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி இறந்தார். அதன் விவரம் வருமாறு:-

சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் சிவபாலன் (வயது 25). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து எம்.எஸ்சி. இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரி விடுமுறையையொட்டி அவர் ஊருக்கு வந்து இருந்தார்.

நேற்று காலை 7.15 மணி அளவில் செய்தித்தாள் வாங்குவதற்காக சூரியம்பாளையம் மெயின்ரோட்டிற்கு நடந்து சென்றார். அப்போது ரோட்டில் அறுந்து கிடந்த மின்கம்பியை அவர் கவனிக்காமல் மிதித்துவிட்டார். இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே சிவபாலன் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவபாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த சிவபாலனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்