ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2019-05-29 22:15 GMT
பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சில்லாரஅள்ளியை சேர்ந்தவர் செல்வம். விவசாயி. இவருடைய மகன் அறிவழகன்(வயது14). இவன் அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து விட்டு இந்தாண்டு 9-ம் வகுப்பு செல்ல இருந்தான். இவன் தனது உறவினர்கள் 10 பேருடன் நேற்று சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு சென்றான்.

இவர்கள் அனைவரும் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த பின்னர் ஆலாம்பாடியில் தேன்கூடு என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது சிறுவன் ஆற்றில் ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கினான். இதை கண்ட உறவினர்கள் சிறுவனை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அறிவழகன் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான்.

உடல் மீட்பு

இதுகுறித்து ஒகேனக்கல் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை தேடினர். அப்போது அவர்கள் குளித்த இடத்திற்கு சிறிது தூரத்தில் சிறுவனின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர்களுடன் சுற்றுலா சென்ற பள்ளி மாணவன் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்