மாவட்டத்தில் ஜூலை 20-ந் தேதி வரை இலவச தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்

நாமக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் இலவச தையல் எந்திரங்களை பெறுவதற்கு வருகிற ஜூலை 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-05-31 23:15 GMT
நாமக்கல், 

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளி பெண்கள் ஆகியோருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட உள்ளது. அதற்காக தகுதி வாய்ந்த பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் தாசில்தாரிடம் பெறப்பட்ட வருமான சான்று, இருப்பிடச்சான்று, பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்தில் 6 மாதம் தையல் பயிற்சி பெற்றதற்கான சான்று, வயது சான்று (20 முதல் 40 வயது வரை) அல்லது கல்விச்சான்று அல்லது பிறப்புச்சான்று மற்றும் சாதிச்சான்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவில் 2 புகைப்படங்கள், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் என்பதற்கான சான்றின் நகல் ஆகியவற்றையும் அத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வருகிற ஜூலை மாதம் 20-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்