‘மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் பேச்சு

மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் கூறினார்.

Update: 2019-06-01 22:30 GMT

மதுரை,

மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 பயிலும் மாணவ–மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மடீட்சியா அரங்கத்தில் நேற்று நடந்தது. கல்வியாளர் நெடுஞ்செழியன் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். முன்னதாக மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சி பள்ளிகளில் அனைத்து வகையான உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மாணவ–மாணவிகள் மேற்படிப்பில் என்ன பாடம் படிக்கலாம் என்று அறிந்து கொள்வதற்காக மாநகராட்சி சார்பில் இந்த உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது சூழ்நிலையை பற்றி நினைக்காமல், திட்டமிட்டு மன உறுதியுடன் படிக்க வேண்டும். நாம் திட்டமிட்டு உழைத்தால் முடியாதது எதுவும் இல்லை. ஆசிரியர்கள் மாணவர்களை சிறந்த மாணவர்களாக உருவாக்குவதுடன் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களின் எண்ணங்கள் உயர்ந்து இருக்க வேண்டும். அதற்கேற்ப தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். தற்போது தகுதியின் அடிப்படையில்தான் அனைத்து விதமான படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் கிடைக்கின்றது. எனவே மாணவர்கள் தங்களது தகுதியினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாணவ–மாணவிகளுக்கு ஒரு தொடக்கம்தான். இதுபோன்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் மாநகராட்சியின் சார்பில் தொடர்ந்து நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை கமி‌ஷனர் குமரேஸ்வரன், கல்வி அலுவலர் விஜயா, தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், கண்காணிப்பாளர்கள் ரமேஷ், பாலமுருகன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்