உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல்: மினி லாரியை கடத்திய டிரைவர் கைது

மினி லாரியை கடத்தி, அதன் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-01 21:45 GMT
ஆவடி,

ஆவடி பொதிகை நகர், பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 42). அதே பகுதியில் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த மாதம் 24-ந்தேதி செஞ்சியை அடுத்த பொன்னாங்குப்பம், துத்திப்பட்டு, ரைஸ்மில் தெருவை சேர்ந்த ராஜதுரை (36) என்பவர் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார்.

கடந்த 27-ந் தேதி மினி லாரியின் உரிமத்தை புதுப்பிக்க வேண்டி செங்குன்றத்துக்கு ராஜதுரையை அனுப்பினார். ரூ.2 ஆயிரமும் கொடுத்து அனுப்பினார். ஆனால் உரிமையாளர் பழனி சொன்னபடி செங்குன்றத்துக்கு செல்லாமல் டிரைவர் ராஜதுரை, மினி லாரியை கடத்திச்சென்று பள்ளிக்கரணை பகுதியில் மறைத்து வைத்தார்.

பின்னர் அங்குள்ள மதுபான பாருக்கு சென்ற ராஜதுரை, அங்கு மது அருந்தி கொண்டிருந்த ஒருவரிடம், “எனது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ ஆகி விட்டது. எனது முதலாளிக்கு போன் செய்யவேண்டும். அப்படியே உங்கள் வங்கி கணக்கு எண்ணையும் கொடுத்தால் எனது முதலாளி அதில் பணம் அனுப்புவார். உங்களுக்கு ரூ.ஆயிரம் கமிஷன் தருகிறேன்” என்றார்.

அதன்படி அந்த நபரிடம் செல்போனை வாங்கி பழனிக்கு பேசிய ராஜதுரை, “மினி லாரியை கடத்தி விட்டேன். ரூ.33 ஆயிரத்தை நான் சொல்லும் வங்கி கணக்கில் போட்டால் லாரியை ஒப்படைப்பேன்” என மிரட்டினார்.

பயந்துபோன பழனி, அவர் சொன்னபடி அந்த வங்கி கணக்கில் ரூ.33 ஆயிரம் போட்டார். பணத்தை எடுத்த ராஜதுரை, அந்த நபருக்கு ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பினார்.

அதன்பிறகு ராஜதுரை மற்றொரு செல்போனில் இருந்து பழனிக்கு போன் செய்து மேலும் ரூ.23 ஆயிரம் கேட்டு மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனி, இதுபற்றி ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ராஜதுரையின் செல்போன் எண்ணை வைத்து அவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை ஆவடி பஸ் நிலையம் அருகே நின்று இருந்த ராஜதுரையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளிக்கரணை பகுதியில் நிறுத்தி இருந்த பழனியின் மினி லாரியையும் மீட்டனர்.

மேலும் செய்திகள்