பள்ளிப்பட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்

பள்ளிப்பட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-02 22:00 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த அம்மையார்குப்பம் ஊராட்சியில் ம.பொ.சி.தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் ஊராட்சி செயலாளர் மற்றும் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் அம்மையார்குப்பம் ஆர்.கே.பேட்டை சாலையில் குடிநீர் வழங்கக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பகுதி மக்களுக்கு உடனடியாக டிராக்டர்கள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக அவர்கள் உறுதியளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்