தொழிலதிபர் மகன் பிறந்தநாள் விழாவில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து மலர் தூவியதால் பரபரப்பு விசாரணை நடத்தப்படும் என உதவி கலெக்டர் தகவல்

கும்பகோணத்தில் தொழிலதிபர் மகன் பிறந்தநாள் விழாவில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து மலர் தூவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று உதவி கலெக்டர் வீராசாமி தெரிவித்தார்.

Update: 2019-06-02 23:00 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக தனியார் ஹெலிகாப்டர் நேற்று காலை திடீரென கும்பகோணம் பகுதியில் பறந்தது. பின்னர் விழா நடந்த பகுதியில் தாழ்வாக பறந்து 3 முறை வட்டமடித்தது. பின்னர் அந்த ஹெலிகாப்டர் கும்பகோணம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் மேலே தாழ்வான உயரத்தில் இருந்தவாறு விழா குழுவினர் மீது மலர்களை தூவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததை பார்த்த அப்பகுதியினர் என்னவென்று தெரியாமல் அதிர்ச்சி யடைந்தனர்.

இதுகுறித்து கும்பகோணம் உதவி கலெக்டர் வீராசாமி கூறியதாவது:-

கும்பகோணம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகன் பிறந்தநாள் விழாவிற்காக ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. இதற்காக விழா குழுவினரின் சார்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் புறப்படும் இடம், பறக்க வேண்டிய உயரம் ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். ஆனால் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்துள்ளது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்