கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண், விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே வீட்டு வேலை செய்யாமல் டி.வி.பார்த்ததை பெரியம்மா கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-06-02 23:00 GMT
கள்ளக்குறிச்சி, 

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகள் ஜெயந்தி(வயது 19). இவரது தாய், தந்தை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதையடுத்து ஜெயந்தி தனது பெரியப்பாவான முருகேசன் என்பவரது பராமரிப்பில் வளர்ந்து வந்தார். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து முடித்துவிட்டு ஜெயந்தி வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று ஜெயந்தி வீட்டு வேலை செய்யாமல் டி.வி. யில் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைபார்த்த முருகேசனின் மனைவி மல்லிகா ஏன் வீட்டு வேலை செய்யாமல் டி.வி.பார்க் கிறாய்? என ஜெயந்தியை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ஜெயந்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயந்தி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்