பொன்னகரம் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

பொன்னகரம் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2019-06-03 22:30 GMT
மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள பொன்னகரம் மகா மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான வைகாசி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் மகா மாரியம்மனுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மகா மாரியம்மன் எழுந்தருள செய்யப்பட்டு, திருஷ்டி பூஜைகள் செய்யப்பட்ட பின் தேரோட்டம் நடைபெற்றது.

பக்தர்கள் தரிசனம்

அப்போது நாதஸ்வர இசை, மேள தாளம் முழங்க வாணவேடிக்கையுடன் ஊர் முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதை தொடர்ந்து பக்தர்கள் பக்தி கோஷத்துடன் பக்தி பாடல்கள் பாடியபடி தேரோடும் நான்கு வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்தனர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். கோவில் தேரோட்டத்தையொட்டி மங்களமேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

மேலும் செய்திகள்