கவர்னருக்கு அதிகாரமில்லை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஜனநாயகத்தை நிலை நாட்டியுள்ளது - நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி கவர்னருக்கு அதிகாரமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இது ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2019-06-04 23:30 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துவது, தன்னிச்சையாக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பது, பல பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு முதல்-அமைச்சர், அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டுவராமல் அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடுவது போன்ற விஷயங்களை செய்து வந்தார். இதற்கு தடைவிதிக்கக்கோரி லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கவர்னருக்கு அதிகாரமில்லை என்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஐகோர்ட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை வேண்டும் என்று தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. கடிதம் மூலம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதிக்க கோரியும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கோடை விடுமுறையில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அப்போது அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததுடன், ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பிற்கு தடை விதிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு மறுத்தது.

இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து, கோர்ட்டு மீண்டும் செயல்பட தொடங்கியது. இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் மத்திய அரசின் வக்கீல் வலியுறுத்தினார். இதன் அடிப்படையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது ஐகோர்ட்டு ஏற்கனவே வழங்கிய தீர்ப்பிற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளது. ஆனால் 2 புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதாவது 7-ந் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் நிதி சம்பந்தமான முடிவுகளை எடுத்தால் அதை வருகிற 21-ந் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும்.

லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தை சுட்டிக்காட்டி, அதில் பிரதிவாதியாக முதல்-அமைச்சரை சேர்க்க மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்படி முதல்-அமைச்சரை சேர்க்க உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் சுப்ரீம் கோர்ட்டு ஜனநாயகத்தை நிலை நாட்டியுள்ளது. கவர்னரின் ஜனநாயகத்திற்கு எதிரான முயற்சி வெற்றி பெறவில்லை.

கவர்னர் தொடர்ந்து அதிகாரிகளை தனது அலுவலகத்திற்கு அழைத்து கூட்டம் போடுவது, பல பகுதிகளுக்கு சென்று பார்வையிடுவது, முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு வராமல் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது போன்ற விஷயங்களை அவர் செய்வதற்கு அதிகாரம் இல்லை என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தற்போது அவற்றையெல்லாம் அவர் செய்வதில்லை. ஆனால் அரசின் முடிவுகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இதுவும் நீதிமன்ற அவமதிப்பு அகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்