தஞ்சை அருகே வாலிபர் அடித்துக்கொலை பெண் உள்பட 7 பேருக்கு வலைவீச்சு

தஞ்சை அருகே தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-06-06 22:15 GMT
சாலியமங்கலம்,

தஞ்சை அருகே உள்ள குளிச்சப்பட்டு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மகன் கோபிநாத்(வயது23). இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் தனது உறவினருக்கு திருமண வாழ்த்து விளம்பர பேனரை வைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரிடம், அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தனது புகைப்படம் உள்ள விளம்பர பேனரை மறைத்து ஏன் பேனர் வைக்கிறாய்? என கேட்டு, கோபிநாத் வைத்த பேனரை கிழித்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் அந்த பகுதியை சேர்ந்த பெண் உள்பட 7 பேர் சேர்ந்து கோபிநாத்தை தாக்கினர். இதை அந்த பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் நந்தகோபால்(19) என்பவர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 7 பேரும் சேர்ந்து கட்டை மற்றும் கல்லால் நந்தகோபாலை சரமாரியாக அடித்தனர்.

பரிதாப சாவு

இதில் நந்தகோபால் மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் நந்தகோபாலை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் நந்தகோபாலை பரிசோதித்துப்பார்த்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அம்மாப்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பெண் உள்பட 7 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். தகராறில் காயம் அடைந்த கோபிநாத், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமண பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்