தோசைக்கு சட்னி வைக்காததால் கணவருடன் தகராறு: பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தோசைக்கு சட்னி வைக்காததை கணவர் கண்டித்ததால் விரக்தி அடைந்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-06-06 22:30 GMT
பாகூர், 

பாகூர் காலனி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சந்தானலட்சுமி (வயது 34). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். சந்தானலட்சுமி சார்காசிமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை சந்தானலட்சுமி வேலை முடிந்து வீடு திரும்பினார். அவர் இரவு உணவுக்காக தோசை தயார் செய்தார். அப்போது வெளியே சென்றுவிட்டு வந்த ரமேஷ், சட்னி வைக்காமல் ஏன் தோசை சுடுகிறாய்? என்று கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த சந்தானலட்சுமி வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று உள்புறமாக பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த ரமேஷ் கதவை உடைத்து பார்த்தார். அப்போது சந்தானலட்சுமி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சந்தானலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்